tamilnadu

img

‘ஆட்டை தாயாக கருத முடியாது; எப்போதும் எங்களுக்கு பசுதான்..’

கொல்கத்தா:

மேற்குவங்க மாநில பாஜக துணைத்தலைவராக இருப்பவர் சந்திர குமார் போஸ். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் ஆவார். இவர் அண்மையில் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.


“மகாத்மா காந்தியை இந்துக்களின் பாதுகாவலர் என்றும், அவர் ஆட்டின் பாலையே குடித்ததால், இந்துக்கள் அனைவரும் ஆட்டைத் தாயாக கருதி, அதன் மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க வேண்டும்” என்பதாக அந்த ட்விட்டர் பதிவு இருந்துள்ளது.


மகாத்மா காந்தி, நேதாஜி வீட்டில் தங்கியிருந்தபோது, பாலுக்காக 2 ஆடுகள் கொண்டுவரப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி, சந்திரகுமார் போஸ் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், ‘காந்தி இந்துக்களின் பாதுகாவலர்’ என்றும் அழுத்தம் திருத்தமாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திரிபுரா மாநில ஆளுநருமான ததகதா ராய், உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.


“காந்தி தன்னை ஒருபோதும் இந்துக்களின் பாதுகாவலர் என்று கூறிக் கொண்டதில்லை; மேலும் நாம் பசுவைத்தான் தாயாக கருதுகிறோமே ஒழிய, ஆட்டை அல்ல; எனவே, தேவையற்ற விஷயங்களைக் கூறி, போஸ் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று ததகதா ராய், பாய்ந்து வந்து பதிலளித்துள்ளார்.


;